Tuesday, May 22, 2012

அடங்காத மகனும் அருப்புகோட்டை பயணமும்




அருப்புகோட்டையில் இருக்கும் என் அம்மாவை கூட்டிகொண்டு என் அக்கா வீட்டில் விடுவதற்காக பொதிகையில் சனிக்கிழமை சென்றேன். சீட்டை தேடி பிடித்து உட்கார்ந்த பிறகு பார்த்தேன்,  என் எதிரில் ஒரு அம்மா இருந்தார்கள். திடீரென்று ஒரு கை அப்பர் பெர்த்தில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை அந்த அம்மா விடம் கொடுத்தது. அந்த அம்மா வாங்கி வைத்து கொள்வார்கள் அல்லது, தண்ணீர் குடிப்பார்கள்  என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை திறந்து திரும்பவும் இந்தாப்பா என்று மேலே கொடுத்தார்கள். சரி ஏதோ ஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும் பையன் போல இருக்குது, அதனால்தான் இவர்கள் திறந்து கொடுகிறார்கள் என்று நினைத்தேன். அவன் இறங்கி வந்த போது பார்த்தால் காலேஜில் முதல் அல்லது இரண்டாம் ஆண்டு படிக்கும் பையன் போலிருந்தான்.அவனுக்கு ஒரு தண்ணி பாட்டிலை ஓபன் செய்ய   கூடவா தெரியாது? வந்தவுடன் அந்த அம்மா பக்கத்தில் உட்கார்ந்து வசதியாக என் பக்கத்தில் காலை நீட்டிக் கொண்டான். 

கடுப்பு #1 
எனக்கு எதிர் சீட்டில் காலை வைப்பது பிடிக்காது. எதிரில் பக்கத்தில் ஆள் உட்கார்ந்து  இருந்தாலும் காலை வைத்துக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மா கேட்க்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொல்லிக் கொண்டு வந்தான். 

கடுப்பு #2 
இப்போது தண்ணீர் பாட்டில் அந்த அம்மாவிடம் இருந்தது. அவன் சொடக்கு போட்டு அம்மாவை கூப்பிட்டு தண்ணீர்  வேண்டும் என்று சைகையில் கட்டினான். எனக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. அந்த அம்மாவும் ஒன்றும் சொல்லாமல் தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்தார்கள். அந்த இடத்திலேயே அவனை கிழி கிழி என்று கிழித்து விடலாம் என்ற கோபத்தை கட்டுபடுத்தி கொண்டேன். 

எனக்கென்னமோ அவன் மேல் குற்றம் இருப்பதாக தெரிய வில்லை. இந்த மாதிரி ட்ரீட் பண்ணும் மகனை நாலு பேர் முன்னாலேயே "நான் என்ன உன் வீட்டு நாயா சொடக்கு போட்டு கூப்பிடுற?" என்று நடு தெருவில் வைத்து கிழி கிழி என்று கிழித்தால் அவன் நாளைக்கு அந்த மாதிரி கூப்பிடுவானா? 

அடுத்த ஸ்டாப்பில் அவன் கிழே இறங்கி கோக் வாங்க சென்றான். மெதுவாக அந்த அம்மாவிடம் "அவன் உங்க பையனாமா? என்று கேட்டேன். அதற்க்கு ஆமாம் என்றார்கள். "என்னம்மா இது சொடக்கு போட்டு தண்ணி கேக்குறாரு 
நீங்களும் ஒன்னும் சொல்லாம குடுக்கிறீங்க" என்றேன். "வீட்டிலேனா கண்டிப்பேன், இங்க எப்பிடி?" ன்னு சொன்னார்கள். "நம்ம பிள்ளைங்களுக்கு நாமதான் நல்லது பொல்லது சொல்லி வளர்க்கணும், இல்லையினா பின்னால வருத்த  படுற  மாதிரி ஆயிடும்" என்றேன். 

எனக்கு அந்த அம்மா வீட்டிற்க்கு சென்று கண்டிக்கிற மாதிரி தெரிய வில்லை.  இப்படி மகனிடமும், கணவனிடமும் 
தன்மானத்தை விட்டு விட்டு வாழும் கோடி கணக்கான பெண்களில் அந்த தாயும் ஒருத்தி.   

Tuesday, May 15, 2012

எழுத்தாளர் பாலகுமாரனின் புகை அனுபவமும் பின்ன நானும்



நான் புகை பிடிப்பதில்லை என்றாலும்தொடவே இல்லை என்று சொல்ல 
முடியாதுநான் +2 வரை  என் ஊரான அபிராமத்தில் படித்தேன். என் அப்பா 
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தலைமை ஆசிரியர். அம்மா இஸ்மாயில்
ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரியை. அப்பா, அம்மாவுக்கு தெரிந்தவர்கள்
அதிகம். அது சின்ன ஊர். எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும். புகையை உள்ளே இழுத்து வெளியே விடுவதற்குள் அவர்களுக்கு சேதி போய்விடும்.

அதனால் நான் பள்ளி முடியும் வரை புகையை தொடாமலே இருந்தேன்
மதுரை S .V . N கல்லூரியில் Chemistry சேர்ந்தேன். அங்கு hostel இல் இருந்த
மக்கள் கேட்ட போது கூட எனக்கு பழக்கம் இல்லை என்று மறுத்த நான்,
புகைக்க ஆசைப்பட்டது ஒரு படத்தை பார்த்து. அண்ணாமலை படத்தில்
ரஜினி ஒரு சிகரட் பிடித்து கொண்டு வருவார்ரொம்ப  ஸ்டைல் ஆன இடம் அது. Moore  சிகரட் என்று பெயர்.  ராயல் பிரவுன் கலரில தங்க நிற  வளையத்துடன் இருக்கும். என் நண்பன் ஒருவன்அது பொம்பளை குடிக்கிற
சிகரட் என்றான். போடா தலைவரே குடிசிருக்காறுன்னு சொல்லிட்டு வாங்கினேன். அந்த சிகரட் எல்லா கடையிலும் கிடைக்காது.அதற்கென்று  மதுரை சென்று  ஒரு கடையில் வாங்கிமனதுக்குள் தலைவரை நினைத்து கொண்டு இழுத்தால் புகை வெளியே வரவில்லைஇருமல் தான் வந்ததுசரி 
இந்த சிகரட் தான் இப்டின்னு வேற  ஒரு சிகரட் எடுத்தால் அதுவும்  அதே
கதை.சரி கழுத, காசக் குடுத்து இருமல் வாங்குவானேன் என்று அறச்சீற்றம் கொண்டேன்விட்டதடி ஆசை விளாம்பழம் ஓட்டோட என்பார்கள், எனக்கு விட்டதடி ஆசை moore    சிகரெட்டோட என்று நினைத்து கொண்டேன். இப்போது நினைத்தால் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்திருகிறேன் என்று தெரிகிறதுஎல்லோராலும் புகை பழக்கத்தை விட முடியாதுஏனென்றால் 
நம்மை டெம்ப்ட் பண்ண நிறைய புகைக்கும் ஆட்க்கள் நம்மை சுற்றி
இருக்கிறார்கள்அதனால் அதை தொடாமல் இருப்பதே நல்லது.

என் பிரியமான பாலகுமாரன் அவருடைய  புகை அனுபவத்தை தினகரனில் 
எழுதியிருக்கிறார் படியுங்கள்.  நிச்சயம்  உங்கள் மனதில் மாற்றம் வரும்.


Thursday, May 10, 2012

ரகளையான ரஹிலா பேகம்


டிவியில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது நிகழ்ச்சி நடத்துபவர்களை விட  அதில் பங்கு பெறுபவர்கள் தங்களின் தனி திறமையால் அந்த  நிகழ்ச்சியை  வேறு ஒரு தளத்துக்கு எடுத்து செல்வார்கள்.அதற்கு உதாரணமாக  சிவகர்த்திகேயனை சொல்லலாம். ஜெயிக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்து தனக்கென ஒரு இடத்தை சின்ன திரையிலும், வெள்ளி
திரையிலும் பிடித்துள்ளார்.

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் சில சமயம் அப்படி சிலர்  வருவதுண்டு. நேற்று நான் வீட்டில் நுழையும் போதே என் மகன் அருள்
 "அம்மா பேகம் தான் வரணும்" என்று சொன்னான். ஏறிட்டு பார்த்தால்
 டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில்
விளையாடுபவர்களை தேர்ந்தெடுக்க ஒரு மொக்கையான கேள்வியை
கேட்டு தேர்ந்தெடுப்பது நடந்து கொண்டிருந்தது. அருள்
நினைத்தபடி ரஹிலா பேகம்தான் மூணு வினாடியில் சொல்லி 
விளையாட தேர்ந்தெடுக்க பட்டார்.

பார்த்தால் கல்லூரி மாணவி மாதிரியான தோற்றம். ஒரு குழந்தைக்கு தாய்.
கணவர் மற்றும் அம்மாவுடன் வந்திருந்தார். அவர் பற்றிய கிளிப்
ஒளி பரப்பினார்கள்.சும்மா கிழிச்சு எடுத்திருச்சு, பஞ்ச் டயலாக்ஸ் வேற.
கிளிப் கடைசியில் "ஏ நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்   நானும்
"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"  கழ்ச்சியில் கலந்துக்க போறேன்னு 
சொன்னது தான் ஹை லைட்.

சூர்யா இந்த ஷோவில் இப்படி சிரிச்சு பார்த்ததில்லை. சில பஞ்ச் டயலாக்ஸ்
1 ) பத்தாயிரம் உறுதி பணம் முடித்தவுடன் "நல்ல வேளை பத்தாயிரமாவது 
     கிடைக்கும், இல்லேனா  எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்".
2 ) தன் குடும்பத்தை பற்றி சொல்லிவிட்டு "பாமிலி டோடல் டேமேஜ்"              
3 ) தன் கணவர் ரொம்ப கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார் என்று சொல்லி 
     விட்டு "இப்படிதான்ஒரு தடவை சுடிதார கண்டுபிடிச்சது  யாருன்னாரு,   
     என்னலேயே முடியலேன்ன பார்த்துக்கோங்க"

இவர் ஒரு சினிமா பிரியர். மொக்க படமாக இருந்தாலும் டைட்டிலில்
 இருந்து வணக்கம் போடும் வரை பார்ப்பவர். பாரதியாரின் பாடல்கள் பிடிக்கும்.
நிறைய புத்தகங்களை படித்திருக்கிறார். சூர்யா "இவர் ஒரு என்ட்டர்டெய்னர்" 
என்று ஒன்றுக்கு இரண்டு முறை நேற்று ஷோவில் சொன்னார்.நேரம் 
இல்லாததால் இன்றும்  இவருடைய  ரகளை தொடரும். என்னால் 
முடிந்தவரை என் எழுத்தில் இவர் ரகளையை கொண்டு வந்திருக்கிறேன். 
இது சும்மா ட்ரைலர். மெயின்  பிக்சர் இன்னைக்கு "நீங்களும் 
வெல்லலாம் ஒரு கோடி"  நிகழ்ச்சியில் பாருங்க. மறக்காம !    

Friday, April 6, 2012

சத்குருவுடன் ஒரு காலை


 கடந்த புதன் கிழமை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த சத்சங்கத்திற்கு அனுமதி சீட்டு கிடைத்தது.காலை 6 .30 மணிக்கு ஆரம்பம். நான் சூளைமேட்டில் இருப்பதால் காலை 5 .30 க்கு எழுந்து ரெடியாகி 6 .15 க்கு  எல்லாம்    சென்று விட்டேன்.
 
வாசலிலேயே தன்னார்வ தொண்டர்கள்  பைக் நிறுத்த இடத்தை காட்டினார்கள்.  ஒரு படி மேலே சென்று நிறுத்த உதவி செய்தார்கள்.  நிறுத்தி விட்டு வள்ளுவர் கோட்டம் வாயிலுக்கு வந்தால் கிட்டத்தட்ட 100  பேருக்கு  மேலாக  இருபுறமும்  நின்று வணக்கம் சொன்னார்கள். எனக்குதான் சொல்கிறார்களா என்று சுத்தி முத்தி பார்த்து கொண்டேன்.  எனக்கே எனக்குதான்.
 
18  வயது இளைஞன் முதல்  60 பெரியவர்  வரை என்னை கை கூப்பி  வரவேற்றனர். திரும்ப கை கூப்ப எனக்கு கூச்சமாக இருந்தது.  மனிதர்களை  பார்த்து கை  கூப்பும் வழக்கமே மறந்து விட்டது தெரிந்து மனம் வருந்தினேன்.  இனிமேல் வீட்டிற்க்கு வரும் பெரியவர்களை கை கூப்பி வரவேற்பது என்று முடிவு செய்தேன். கிட்ட தட்ட 150   மீட்டருக்கும்   மேலாக இருபுறமும் கை கூப்பி நின்று வரவேற்றனர்.
 
உள்ளே போனால் செருப்பு போடும் இடத்தை பகுதி பகுதியாக பிரித்து அதற்க்கு
 நம்பர் போட்டிருந்தார்கள்.தொண்டர் ஒருவர் "உங்கள் பகுதி எண்ணை நியாபகம்  வைத்து கொள்ளுங்கள். திரும்ப  வந்து எடுக்கும்போது சீக்கிரமாக  எடுக்க முடியும்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். செருப்பு   வைப்பதற்கு  சாக் பீசினால் கோடு போட்டிருந்தனால் ஒழுங்கான வரிசையில் 
செருப்பை வைக்க முடிந்தது. நிறைய திட்டமிடல் இதற்கு தேவை.
 
அதற்குள் அரங்கம் நிரம்பி இருந்தது. அரங்கத்தை சுற்றி இருக்கும் இடத்தில் அமர வைக்க பட்டோம். அது தவிர ஸ்டேஜை கவர் செய்து வெளியே  ஒளிபரப்பிக்கொண்டு இருந்தனர். நான் அமர்ந்தபோது ஈசாவின் பாடல்கள் இசைத்து கொண்டிருந்தார்கள். "நெத்திலி மீனுக்கென்ன ஆச திமிங்கலம்     போல ஆக ஆச, ஏலேலோ ஐலசா ஏலேலோ" என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. கூட்டமும் தன்னை மறந்து கை தட்ட தொடங்கியது. இடையிடையே "அமர்ந்த இடத்திலே அமரலாம். செல் போனை அணைத்து விடலாம். தேவை இல்லாத அங்க அசைவுகள்   வேண்டாமே" என்று ஆணை  இடாமல் ஆலோசனை சொல்லும்  தொனியில்  சொல்லி கொண்டிருந்தார்கள். 
  
சிறிது நேரத்தில் கூட்டம் பரபரப்பாகியது. நான் அமர்ந்த இடத்துக்கு  70  மீட்டர்  முன்னால் இருந்த படிகளில் தான் மேடைக்கு வருகிறவர்கள் ஏறி  வர  வேண்டும். அந்த படிகளை பார்க்க முடியாதவாரு  ஒரு   துணியால்   தடுத்து இருந்தனர். அதனால் ஏறுபவர்கள் உடனே நம்  கண்ணுக்கு தெரிய  மாட்டார்கள். அவர்கள் மேலே ஏற ஏற சிறிது சிறிதாக தெரிவார்கள். முதலில் 
அவருடைய தலைபாகை,நெற்றி , முகம், தாடி, சால்வை   போர்த்திய  தோள்கள் என்று சிறிது சிறிதாக தெரிந்து பிறகு முழு உருவம் தெரிந்தது.  குரு தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது.
 
அவர் மேடைக்கு வந்த பிறகும் இசைத்து கொண்டிருந்த பாடலை உடனே நிறுத்தாமல் சாதரணமாக பாடி முடித்தனர். இதுதான் ஈஷா ஸ்டைல். 
அவர் மேடையில் வந்தவுடன் நிறைய ஆ வூ ஏய் என்று சிலர் சத்தமிட்டு 
உடலை முறுக்கி கொண்டு ஆட ஆரம்பித்தனர். எங்கள் ஊர் மாரியம்மன்  திருவிழாவில் அருளாடுபவர்கள் நியாபகம் வந்தார்கள். எனக்கு இது மாதிரி சத்சங்கத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.எனக்கு என்ன இப்படி இருக்கிறது என்று நினைத்தேன்.
 
குருவின் முதல் வார்த்தையே "ஆன்மீகம் என்றால் ஆர்ப்பாட்டம் என்று  நினைத்து கொள்கிறார்கள்" என்று என்று அப்படி ஆடியவர்களை  பார்த்து  சொன்னார். ஈஷா தொண்டர்கள் அப்படி ஆடியவர்களிடம் சென்று
அப்படி ஆடக்கூடாது என்று சொன்னார்கள்.  ரெண்டே நிமிடத்தில் அந்த ஆர்ப்பாட்டம்  நின்று விட்டது. :-) தேவை இல்லாத அங்க அசைவுகள் என்று இதைதான் சொன்னார்கள்  போலிருக்கிறது.  
 
அதற்கப்புறம்  சுமார் 20  நிமிடங்கள்  குருவின் உரை இருந்தது. ஈஷா ஆரம்பித்து 30 வருடங்களாகியும்  தன்னால் நிறைய பேரை நல்வழி  படுத்த முடியவில்லை என்று வருத்தப் பட்டார். ஈஷா ஆரோக்யா ஏன் என்று  சொன்னார்.உங்களில் இவ்வளவு பேருக்கு தானா சர்க்கரை நோய் இருக்கிறது, ஓ இது ஈசாவின் கூட்டம் அல்லவா என்று சந்தோசப் பட்டார்.
 
பிறகு கேள்வி நேரம் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்க அவர் பதில்  சொன்னார். கற்றுக்க் கொண்ட யோகாவை மறக்காமல் செய்ய முடிவு  செய்தேன்.    அன்றைய பொழுது சத்குருவுடன் இனிதே புலர்ந்தது.                  
      

Wednesday, March 28, 2012

உண்மை சம்பவம் : எதிரில் எதிரி

உண்மை  சம்பவம் : எதிரில் எதிரி

டிடிங்,டிடிங் என்று அழைப்பு மணி அலறியது.
சமயலறையில் வேலையில் இருந்த இருந்த சுகுணா சேலை தலைப்பில் கையை துடைத்தவாரே கதவை திறந்தாள். எதிரில் எதிர் வீட்டு துர்கா கோபத்துடன் நின்றாள். இவள் எதற்கு என் வீட்டு கதவை தட்டுகிறாள் என்று நினைத்தவாரே "என்ன ?" என்றாள்.

"நீ தான் என் வீட்டு கொடியை கழட்டின்னாயா ?"
"அது உங்க வீட்டு கொடியின்னு எனக்கு தெரியாது, ரொம்ப உயரம் குறைவாக இருந்தது. கட்டியிருந்த கொம்பும் உடைந்து இருந்தது. அதனால்தான் கழட்டி வைத்தேன்" என்றாள் சுகுணா.  

அதெப்படி நீ கழட்ட போயிற்று என்று பிடித்து கொண்டாள் துர்கா. எட்டு வீடு கேட்கும் படி காச்சு காச்சு என்று காச்சி எடுத்து விட்டு தான் அடங்கினாள்.
 சுகுணா எவ்வளவோ தான் வேணுமென்றே செய்யவில்லை என்றாலும் துர்கா கேக்கவில்லை. 

பிளாஷ் பேக்  
 சுகுணாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. எப்படி இருந்த துர்க்கா இப்படி ஆகிவிட்டாள். துர்க்கா மூடி டைப் தான். எதிர் வீடாக இருந்தாலும் வந்த புதிதில் சுகுணாவிடம் முகம் கொடுத்து பேச ஆரம்பிக்க வில்லை. "ஒருத்தி எதுத்த வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பாத்து சிரிக்க  கூடவா மாட்டா?" என்று கணவனிடம் அங்கலாய்தாள். மேல் வீட்டில் இருக்கும் ஜமுனா மூலமாகத்தான் மெதுவாக பேச ஆரம்பித்தாள். துர்காவின் மகன் ஒரு தடவை சுகுணாவின் குழந்தைகள் படிக்கும் போது அதை கெடுப்பது போல வீட்டுக்குள் வந்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தான்.
 அது சுகுணாவுக்கு பிடிக்காமல் "நீ போய் நாளைக்கு வா விளையாட"   என்று சொல்லி அவனை அனுப்பி கதவை சாத்தினாள். அது முதல் துர்கா சுகுணாவிடம் பேசவில்லை. சுகுணாவே துர்கவிடம் போய் "நான் என்ன தப்பு செய்தேன்னு இப்படி இருக்கீங்க?" என்று கண் கலங்க கேட்ட போது "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாலும் துர்கா பேசவே இல்லை.     

துர்காவின் கணவர் சேகர் ஆப்டெக்கில் பிரான்ச் மேனேஜர் ஆக இருந்தார். ஒரு பையன் துர்காவிற்கு. சேகர் ஒரு மாருதி வண்டி வைத்திருந்தார்.  அதை தினமும் காலையில் வாக்கிங் முடிந்த பிறகு கழுவி துடைத்து பிறகே மற்ற வேலை செய்வார். கேட்டால் நம்ம வண்டிய வச்சுக்கிற அழகப் பார்த்தாலே நம்ம எப்படின்னு தெரியனுங்க " என்பார். சுகுணாவிடமும் நன்றாக பேசுவார்.

துர்க்கா வந்து கத்தி விட்டு சென்ற பிறகு அழுகையுடன் தன் கணவருக்கு
போன் பண்ணி ஒரு பாட்டம் அழுது விட்டு நடந்ததை சொன்னாள்.
சுகுணாவின் கணவன்  தான் வந்து சேகரிடம் பேசுவதாக சொன்னான். அதுவும் சுகுணாவுக்கு நல்லதாக பட்டது. துர்கவிடம்  தன் கணவன் பேசி  அவனுடனும் ஒரு சண்டை போட்டாலும் போடுவாள்.சேகரிடம் பேசுவதே நல்லது என்று நினைத்துக்கொண்டாள்.

மறு  நாள் சேகர் காரை துடைத்து விட்டு வரும் போது சுகுணாவின் கணவன் சேகரை பார்த்து நடந்ததை சொல்லி, சாதாரண விஷயத்துக்கு இப்படி
ஓவர் ரியாக்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லி இனி ஏதும்
பிரச்னையென்றால் சேகர் தன்னிடமே சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டான். சேகரும் தன் மனைவியிடம் எடுத்து சொல்வதாக சமாதானம் சொன்னான்.
 
துர்க்கா அழுகை
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் சேகர் பெங்களூர் ஆபீஸ் டூர் சென்ற சமயமாக
துர்க்கா  சுகுணாவின் வீட்டை தட்டி சுகுணாவின் கணவனிடம்

"நீங்க என் வீட்டுகாரரிடம் என்ன பேசினீங்கன்னு தெரியல, உங்களால  எங்களுக்குள்ள பெரிய சண்டை" 

"நான் அன்னிக்கி நடந்த விஷயத்தை பத்தி தான் சொன்னேன். இனிமே 
எதுவானாலும் உங்க வீட்டுக்காரர் என்கிட்டே சொல்லட்டும்ன்னு தான் சொன்னேன்"    

"என் வீட்டுக்காரர் என்கிட்டே இப்படி சண்டை போட்டதே இல்லை. உங்களால் என் வாழ்கையே நாசமாயிடும் போல இருக்கு"  என்றாள். 

பிரச்னை வேறு மாதிரி செல்வதை அறிந்தவன் "சரி என்னால் உங்களுக்குள் பிரச்னை வேண்டாம். நான் சேகர் வந்ததும் பேசுகிறேன்" என்றான்.

ஒரு வாரம் கழித்து துர்க்கா வீட்டில் இருந்து "டொம்  டொம்மென்று சத்தம் கேட்டது. சேகர் இன்னும் பெங்களூரில் இருந்து திரும்பி இருக்கவில்லை. ஆனால் வீட்டில் ஆளரவம் தெரிந்தது. வேலையாட்கள்  சிலர்  பெட் ரூமில் இருக்கும் AC  யை கழற்றி கொண்டு இருந்தனர். அவர்களிடம் 
விசாரித்த போது "வீடு மாத்துராங்கமா" என்று சொல்லி விட்டு நடையை  கட்டினர்.

துர்காவின் அண்ணன்கள் வந்திருப்பது தெரிந்தது. மாலைக்குள் அனைத்தையும் 
காலி பண்ணி விட்டு போய் விட்டாள். இரவு வந்த கணவனிடம்  "என்னால்தான் அவள் வீட்டையே காலி பண்ணி விட்டு போய் விட்டாள்" என்று அழுதாள் சுகுணா. அவள்  கணவனோ "விடு இதில் நம்ம தப்பு எதுவும்    இல்லை. சேகர் இப்படி சண்டை போடுவார்ன்னு நமக்கு தெரியவா  செய்யும். எங்க இருந்தாலும் அவங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கட்டும். தினம் தினம் சண்டைக்காரி முகத்தில் முழிக்கிற கொடுமையாவது  இப்போ இல்லை " என்று சொன்னான்.                 

ஷாக்கான சேகர்   
இது நடந்து முடிந்த பிறகு வந்த சனி கிழமை சேகர் பெங்களூரில் இருந்து  வந்து இறங்கினார். சரி முழுவதும் காலிபண்ணவில்லை  போலிருக்கிறது. 
மிச்சம் இருப்பதை எடுத்து கொண்டு  போறார் என்று நினைத்தாள்  சுகுணா. சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த  சேகர் பேய்  அறைந்தவனை போல்  போன் மேல் போன்  போட்டு யாரிடமோ பேசினான். பின்பு சுகுணாவிடம் வந்து "துர்க்கா எங்கே போறேன்னு சொல்லிட்டு போனாளா ?" என்று கேட்கவும் சுகுணாவிற்கு தூக்கி வாரி  போட்டது  "என்னது வீடு காலி பண்ணியது உங்களுக்கு  தெரியாதா?" என்று கேட்டாள். "எனக்கு   எதுவும் தெரியாது அன்னைக்கு  போனவன்   இப்போ தான்   வரேன்"  என்றான். சரியாய் போச்சு என்று துர்க்கா வந்து தன் கணவனிடம் பேசியதை சொன்னாள். "நானும் கொஞ்சம் ஹார்ஷ் ஆக  பேசிட்டேன்" என்றான் சேகர். சரி இப்படி ஆனாலும் அவங்க அம்மா வீட்டுக்கு தான் போய் இருப்பாள் போய் கூட்டி  வாருங்கள் என்றாள் சுகுணா. 

சுகுணாவுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. "இப்படியா ஒருத்தி
புருஷனுக்கு தெரியாம வீட்டையே காலி பண்ணிட்டு போவா?" என்று பினாத்தி கொண்டிருந்தாள். போன சேகர் திரும்பி வந்தார் தனியாக.
கேட்டபோது துர்கா தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும், அவளுடைய 
அண்ணன்கள் தான் அவள் உன்னுடன் வாழ மாட்டாள்  என்றும்,  அவன் மீது வரதட்சணை கொடுமை பண்ணியதாக போலீசில் புகார் பண்ணி 
இருப்பதாக சொன்னார். தன் மகன் கூட தன்னிடம் சரியாக பேசவில்லை 
என்றார். என்னடா தலை வலி போய் திருகு வலி வந்த கதை ஆகி  விட்டதே என்று நினைத்தாள் சுகுணா. சேகர் தன் துணியை மட்டும் விட்டு விட்டு தன் கார் மற்றும் பைக்கை கூட எடுத்து சென்று விட்டாள் என்று சொன்னார்.  

உண்மை தெரிந்தது            

துர்க்கா சுகுணாவிடம் தான் சண்டை போட்டிருந்தாலும் மேல் வீட்டு ஜமுனாவிடம் நல்லா பழகி கொண்டு இருந்தாள்.  இந்த களேபரம் எல்லாம் முடிந்து ஒரு நாள் ஜமுனா சுகுணா வீட்டிற்க்கு சென்று "உங்களுக்கு விஷயம் தெரியுமா  ?" என்று ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன விவரம் இதுதான் "சேகர் ஒரு செலவாளி. வாங்கும்    சம்பளத்துக்கு   ஏற்ப குடும்பம் நடத்தாமல், கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல்  லோன் வாங்கி செலவு செய்கிறானாம். இருக்கின்ற கார் பைக் கூட அதில் வாங்கியது தானாம். அவன் சென்னைக்கு  வந்ததே ஊரில் வாங்கிய  கடனை  அடைக்கத்தான். ஆனால் அவன் இங்கும் எல்லா பாங்கிலும் பர்சனல் லோன் வாங்கி இருக்கிறான். அதனால் தான், துர்கா எல்லாத்தையும் வழித்து  எடுத்துக்கொண்டு  போய் விட்டாள்".

சுகுணாவால் நம்பவே முடியமில்லை சேகரா இப்படி. தினம் காரை சுத்தமாக
கழுவும் அவன் முகம் வந்து போனது. சுத்தம் காரில் மட்டும் தானா? 

பின் குறிப்பு

1) சேகருக்கும் துர்க்காவுக்கும் டைவேர்ஸ் ஆகி விட்டது.

2) பெங்களூர் போன சேகர் அதற்கப்புறம் சென்னை பக்கமே எட்டி  
    பாக்கவில்லை.

3) துர்கா திரும்பவும் சுகுணா இருக்கும் அதே ஏரியாவில் குடியேறி
    இருக்கிறாள். தனியாக வேலைக்கு போய் தன் மகனை படிக்க
   வைக்கிறாள்.

4) துர்காவின் மகனும் சுகுணாவின் குழைந்தைகளும் ஒரே பள்ளியில்  
    இப்போது படிக்கிறார்கள்.

5) இப்போதும் சுகுணாவின் வாசலில் "மேடம் எதிர் வீட்டில் சேகர்ன்னு
    ஒருத்தர் பர்சனல் லோன் வாங்கிட்டு கட்டவே இல்லை, உங்களுக்கு அவர் 
    அட்ரஸ் தெரியுமா ?" என்று பேங்க் ஏஜெண்டுகள் கேட்டு 
    கொண்டிருக்கின்றனர்.        

6) சேகர் பர்சனல் லோன் மூலம் பாங்குகளை ஏமாற்றி இருக்கும் தொகை 
     மட்டும் அறுபது லட்சம் 

இப்போது சொல்லுங்கள் சுகுணாவின் எதிரில் இருந்த எதிரி  துர்க்காவா  சேகரா?

Tuesday, March 20, 2012

நாட்டு நடப்பு : ரயில்வே ஸ்மார்ட் கார்டு



கடந்த வாரம் குடும்பத்துடன் பல்லாவரம் போக வேண்டி இருந்ததால், ரயிலில் போக முடிவெடுத்தோம். மாலை 5.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போனால் டிக்கட் எடுக்க மூணு வரிசையில், ஒவ்வொரு வரிசையிலும் மினிமம் அம்பது பேர் இருந்தனர். நானும் ஒரு அனுமார் வாலில் போய் ஜாயின் பண்ணி கொண்டேன். எனக்கு முன்னால் ஒரு T - Shirt போட்ட இளம் பெண். என் மனைவி "நாங்கள் பிளாட்பார்மில்  வெயிட் பண்ணுகிறோம், ஒழுங்கா (இதுக்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து) டிக்கெட் வாங்கிட்டு வாங்க என்று முன்னாள் இருக்கும் இளம் பெண்ணை பார்த்த படியே சொல்லி விட்டு சென்றார்.

அழகான இளம் பெண்ணாக மட்டும் பிறக்க கூடாது. க்ராஸ் ஆகும் ஒவ்வொரு ஆணும் அந்த பெண்ணை நன்றாக பார்த்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். எஸ்க்யுஸ்  மி என்று இரு பெண்கள் எங்களை கடந்து சென்றனர், வரிசையில் முந்தி நுழைந்து விடப்போகின்றனரோ என்று பார்த்தால் ஒரு மிசின் முன்னால் போய் நின்று ஒரு கார்டை வைத்து டச் ஸ்க்ரீனில் ஏதோ செலக்ட் பண்ணி ஓர் பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு போய் விட்டனர். விசாரிக்கும் போது அது புதிதாக வந்திருக்கிற SMART கார்டு என்றார்கள். இது நான் சிங்கப்பூரில் இருக்கும் போது தினம் யூஸ் பண்ணியதுதான். சிங்கப்பூரில் மனித வளம் குறைவு அதனால் முடிந்த வரை ஆட்டோமேட் பண்ணி விடுவார்கள்.

எப்படி வாங்குவது 

நான் டிக்கெட் வாங்கும்போதே  கார்டையும் வாங்கி விட்டேன். சென்னையில் இருக்கும் எல்லா ரயில் நிலையங்களிலும் கொடுகிறார்கள். ரூ 100 கட்டி இந்த கார்டை வாங்கினால் ரூ 50 செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் ரூ 52 இல் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.    
 
இதனால் என்ன நன்மை.

கியூவில் நிற்க தேவை இல்லை.  நேராக அந்த மிசினுக்கு சென்று கார்டை அதற்கு உரிய இடத்தில வைத்து விட்டு தற்போதய ஸ்டேஷன் மற்றும் செல்ல வேண்டிய ஸ்டேஷன் செலக்ட் பண்ணினால், உங்கள் கார்டில் இருந்து உரிய அமௌண்டை எடுத்துக் கொண்டு டிக்கெட்டை கொடுத்து விடும்.

மிசின் எங்கெல்லாம் இருக்கிறது 

எனக்கு தெரிந்த வரை பல்லாவரம், மாம்பலம், நுங்கம்பாக்கம், எக்மோர் ரயில் நிலையங்களில் உண்டு. மற்ற நிலையங்களில் இருக்க நிறைய சான்ஸ் உண்டு. பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரவும்.

என்ன பிரச்னை வரலாம் 

மிசின் ரிப்பேர் ஆகி ரயில்வே நிர்வாகம் அதை சரி செய்ய தாமதம் ஆனால் திரும்ப கியுக்கு வரவேண்டிய கட்டாயம் மட்டுமே.

ஆனால் துணிந்து வாங்கிவிட்டேன், இது மாதிரியான Technology improvement ஐ நாம் வரவேற்க வேண்டும்.  வரவேற்றால்தான் அரசும் இது மாதிரியான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். 

இந்த கார்டை திரும்ப ரயில்வே கவுன்டரில் கொடுத்து பணத்தை திரும்ப வாங்கிகொள்ளும் வசதியும் உண்டு.

Sunday, March 18, 2012

ஹோட்டல் பிரவேசம் : மேடவாக்கம் ஹோட்டல் பாரதி

ஹோட்டல் பாரதி


சோழிங்கநல்லூர் ஜங்ஷன் இல் இருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் உள்ள எல்காட் SEZ இல் வேலை பார்க்கிறேன். சில சமயம் சனி, ஞாயிற்றுகிழமைகளில் கூட வேலை நீண்டால் மதிய சாப்பாடு SEZ ல் கிடைக்காது.வெளியே OMR சாலையில் அமராவதியிலோ, HOT சிப்சிலோ மதிய சாப்பாடு முடியும். ஒரு மாற்றத்திற்காக மேடவாக்கம் பக்கம் போகலாம் என்று போனேன். குளோபல் ஹாஸ்பிடல் தாண்டினால் ஒரு BEND வரும் அந்த இடத்தில் உள்ளது இந்த ஹோட்டல். 

வாசலிலேயே சைனீஸ் மீல்ஸ், தந்தூரி மீல்ஸ் கிடைக்கும் என்று எழுதி
இருந்தார்கள். சைனீஸ் மீல்ஸ் ஆர்டர் பண்ணினேன். அதிக நேரம் எடுக்காமல் உடனே வந்தது.   

  1) வெஜ் பிரைடு ரைஸ் 
  2) வெஜ் நூடுல்ஸ்
  3) கோபி மன்சூரியன் 2 வகை            
  4) கோபி 65 
  
கோபி மன்சூரியன் 2 வகையுமே மிக நன்றாக இருந்தது. வெஜ் நூடுல்ஸ்ம்
சூப்பர். கோபி மன்சூரியன் தனியாக வாங்கினால் ரூ 60 ஆகும். ஆனால்
இதில் மூணு வகை இருந்தாலும் விலை ரூ 85 மட்டுமே. ஒரே குறை ரைஸ் அளவு குறைவாக இருப்பது தான்.          

இது தவிர சாதாரண மீல்ஸ் ரூ 50, தந்தூரி மீல்ஸ் ரூ 60 (என்று நினைக்கிறன்) இருக்கிறது. கொடுத்த காசுக்கு வொர்த்.

தரம்    : ***
சுவை   : ****
காசுக்கு 
வொர்த் : ****